Wednesday, June 15, 2011

ஆடி மாதம்

ஆடி மாதம் என்றாலே பண்டிகைகள் வரிசையாக வந்து விடும். ஆடி ஒன்றாம் தேதி, ஆடிப்பண்டிகை. அன்று வாசலில் அன்று வாசலில் மாக்கோலம் போட்டுச் செம்ம‍ண் இட வேண்டும். அன்று சமையலில், இனிப்புப் போளி செய்வார்கள்.(முடியாவிட்டால் ஏதாவது பாயசம் செய்ய‍லாம்).

வடை, பாயசம் எல்லாம் செய்து சாப்பிடுவார்கள். அன்று மாலை, இளம் தேங்காயை வாங்கி வந்து, மேலே உள்ள .தேங்காய் நாரை எடுத்துவிட்டு, வழுவழுப்பாகச் செய்து, ஒரு கண்ணைப் பொத்து, அதில் உள்ள‍ இளநீரை எடுத்து வைத்து, தேங்காய்க்குள், வறுத்த‍ அவல், பாசிப்பருப்பு, வெல்ல‍ம், எள் எல்லாவற்றையும் பொடி செய்து அதில் நிறைய திணித்து எடுத்து வைத்த‍ இளநீரை அதில் ஊற்றி, வாதநாவல் குச்சியை சீவி, அதை அடைப்பார்கள். அதற்கு மஞ்சள் குங்குமம் தடவி, இளம் தணலில், ஓலையை வைத்துச் சுடுவார்கள். அப்படிச் சுடும்போது, உள்ளே இருக்கும், பூரணம் வெந்து தேங்காய் ஒரு வெடிக்கும், அதை அப்ப‍டியே எடுத்து சுவாமி முன்வைத்துப் படைப்பார்கள். திருஷ்டி கழித்து என்பார்கள். அதை மெதுவாக எடுத்து ஓட்டைப் பிரித்து, உள்ளே இருக்கும். பூரணத்தைத் தேங்காயோடு கட்பண்ணி எல்லாருக்கும் கொடுத்துச் சாப்பிடுவார்கள். தேங்காய் சூடும் பண்டிகை, என்பார்கள் இன்றும் கிராமங்களில் இதை விடாமல் செய்து வருகிறார்கள்.

ஆடிமாதம் வரும் 4 வெள்ளிக்கிழமைகளில் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை வீட்டில் நாமகிரி அம்மனுக்கு மாவிளக்குப் போட்டு, புற்றுக்கும் சென்று மாவிளக்குப் போட்டு, மாரியம்ம‍னுக்கும் மாவடியனுக்கும் பால் வாங்கிக் கொடுத்து விட்டு வருவது வழக்க‍மாக உள்ள‍து. வெளியூரில் உள்ள‍வர்கள் வெள்ளிக் கிழமை அன்று அம்ம‍ னை நினைத்து வீட்டில் மாவிளக்குப் போடலாம்.

மாரியம்ம‍ன் பண்டிகை

வைகாசி மாதம், கரூரில் மாரியம்ம‍ன் பண்டிகை மிகவும் பிரசித்த‍ம். அம்ம‍னுக்கு முதல் காப்பு கட்டியதிலிருந்தே, கம்பத்திற்குத் தண்ணீர் ஊற்ற‍ ஆரம்பித்து விடுவார்கள். மாரியம்ம‍னுக்கு ஒரு வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் நடைபெறும்.

அன்று கோயிலுக்குச் சென்று பால் வாங்கிக் கொண்டு போய் கொடுத்துவிட்டு மணமுள்ள‍ பூக்க‍ ளை வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்து நமஸ்காரம் செய்து விட்டு வரவேண்டும்.

இரண்டாம் காப்பு கட்டியபிறகு, திருவிழா (அக்னி சட்டி, அலகு குத்தி எடுப்பார்கள்) மூன்று நாட்கள் பால்குடம் நடக்கும். பண்டிகை நாட்களில் ஒரு வெள்ளிக்கிழமை மாரியம்ம‍னுக்கு வீட்டில் மாவிளக்குப் போட வேண்டும். ஒரு சொம்பில் நிறைய நீர் ஊற்றி, அதில் மஞ்சள் பொடி, விபூதி, குங்குமம் போட்டு, வேப்ப‍ந்தழை நிறைய வைத்து ஒரு குழவிக்க‍ல்லை அதில் செருகி அதற்கு கண்மலர் வைத்து விபூதி இட்டு மஞ்சள் பூசி, சந்தனம் குங்குமம் இட்டு, மாலைகள் போட்டு, ஒரு இரவிக்கைத் துணியை சொம்பிற்குப் பாவாடையாகக் கட்டி, அம்ம‍னுக்கு, நகைகள் போட்டு, அலங்காரம் செய்ய‍ வேண்டும்.

அன்று விரதம் இருந்து, சமைத்து, பாயசம் வைத்து, சுவாமிக்கு (சாதம், பருப்பு, பாயசம் ) மாவிளக்கு போட்டு இரண்டு தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம, நீர்மோர், பானகம் வைத்து, மாரியம்மனை வேண்டிக் கொண்டு பூஜை செய்ய‍ வேண்டும். தீபாராதனை செய்து, தேங்காய் பழம் உடைத்து, ஆரத்தி எடுத்து, முடிவு செய்ய‍ வேண்டும். அடுத்த‍ நாள் காலை குளித்து விட்டு, சுவாமிக்கு கற்பூரம் காட்டி, எடுத்து வைத்துவிட்டு, அந்தச் சொம்பில் உள்ள‍ நீரை மாரியம்மன் கோயிலில் உள்ள‍ கம்பத்த‍டியான் மீது ஊற்ற‍ வேண்டும். இந்த 15 நாள் பண்டிகையில், நம்மால் முடிந்த அளவுக்கு - மூன்று நாளோ, ஒரு நாளோ - கோவிலுக்குச் சென்று மாரியம்ம‍ன், கம்பத்த‍டியானுக்கு, தண்ணீர் ஊற்றி வேண்டிக் கொண்டு வர வேண்டும்.