எங்கள் மாமியார் அம்முலு என்னும் அலமேலு ஸ்ரீதரன், எங்கள் வசதிக்காக எழுதிக் கொடுத்த பண்டிகை மற்றும் சமையற் குறிப்புகளைச் சேமிக்க வே இந்தப் பகுதி
Showing posts with label மார்கழி மாதம். Show all posts
Showing posts with label மார்கழி மாதம். Show all posts
Wednesday, December 26, 2012
போகிப் பண்டிகை
மார்கழி மாதம் முடியும் போது, போகிப் பண்டிகை வரும். மார்கழி இறுதியிலேயே, வீட்டைச் சுத்தம் செய்து சுண்ணாம்பு அடித்து, செம்மண் பட்டை இட்டு வீட்டில் உள்ள பழைய பொருட்களை எல்லாம் அப்புறப்படுத்த வேண்டும். அன்று வாசலில், செம்மண் இட்டு, கோலம் போடுவார்கள். மார்கழி முப்பது நாட்களுமே, வாசலில், பெரிய பெரிய கோலங்கள் இட்டு பரங்கிப் பூ கொண்டு வந்து கோலத்தின் நடுவில் சாணியை உருட்டி வைத்து பூவே அதில் செருகி வைப்பார்கள்.
போகிப் பண்டிகைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து, வடை தட்டி பாயசம் செய்ய வேண்டும். போளி செய்ய வேண்டும். அன்று கரும்பு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு, எல்லாம் வாங்கி வருவார்கள். கூடைப் பூ வாங்கி வந்து நல்ல நேரம் பார்த்து, வீட்டு வாசல் பின்பக்கம், வாகனங்கள் எல்லாவற்றிற்கும் காப்பு கட்டுவார்கள்.
2 வெண்கலப் பாத்திரத்தைத் தேய்த்து, சுண்ணாம்பு தடவி, சூரியன் சந்திரன் வரைந்து, மஞ்சள் செடியை கழுத்தில் கட்ட வேண்டும். முதல் நாளே, எல்லாவற்றையும் தயார் செய்து கொள்ள வேண்டும்.
திருவாதிரை
நான்கு நாட்கள் கழித்து திருவாதிரை பண்டிகை வரும். அன்று சிவன் கோயில் காலை 5 மணிக்கு ஆருத்திரா தரிசனம் பார்க்க வேண்டும். அன்று திருவாதிரை களியும், ஏழு காய் கூட்டும், செய்து சுவாமிக்கு பூஜை செய்வார்கள்.
திருவாதிரைக் களி ;
பச்சரிசி 2 டம்பளர்
பாசிப்பருப்பு அரை டம்பளர்
ஏலக்காய்
முந்திரி
நெய்
தேங்காய்
வெல்லம் 3 டம்ளர்
அரிசியைக் கழுவி, உடனே வடியவிட்டு, காய்ந்ததும், வாணலியில் போட்டு வறுக்க வேண்டும். பொன் கலராக வரும்போது, அடுப்பை அணைத்து விடவும். பாசிப்பருப்பையும், சுட வைத்துக் கொள்ளவும். ஆறியபின், இரண்டையும், ஒன்றாக மிக்ஸியில் போட்டு வெள்ளை ரவை போல பொடித்துக் கொள்ளவும். ஒரு கெட்டியான பாத்திரத்தில், 6 டம்பளர் தண்ணீர் விட்டு, நன்கு காய்ந்ததும், தேங்காயைத் துருவி அதில் போடவும். ஏலக்காய் பொடி செய்து போடவும். ரவையைக் கொட்டி, உப்புமாவைப் போல் வேக விடவும்.
வேறு ஒரு பாத்திரத்தில், வெல்லத்தைக் கரைத்து, கல் மண் போக வடிகட்டி, மறுபடியும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும், இறக்கி, வெந்து கொண்டிருக்கும் அரிசி குறுணையில் கொட்டவும். அரை கப் நெய்யைக் காய்ச்சி அதில் விடவும். முந்திரிப் பருப்பு பொன்னிறமாக வறுத்து அதில் போட்டு கலக்கவும்.
இதற்கு தொட்டுக் கொள்ள, ஏழு காய்கள், ஏழு கொடிக் காய்கள், கிழங்கு வகைகள் பருப்புகள் போட்ட புளிக்கூட்டு செய்து சாப்பிட வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி
மார்கழி மாதம் 30 நாட்களும், விடியற்காலை ஐந்து மணிக்காவது எழுந்து சீக்கிரம் குளித்து விட்டு, சிவன் கோயில், பெருமாள் கோயில்களுக்குச் சென்று வரலாம். இந்த மாதம் வைகுண்ட ஏகாதசி வரும். அன்று விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசனம் செய்து விட்டு சொர்க்க வாசல் மிதித்து விட்டு வரலாம். அன்று ஒருவேளை மட்டும் பலகாரம் செய்யலாம். வயதானவர்கள் உப்பில்லாமல் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவார்கள். அடுத்த நாள் துவாதசி அன்று சீக்கிரமே குளித்து விட்டு ஏழு மணிக்குள் சமைத்து விட்டு சீக்கிரமே சாப்பாடும் சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்கள். அன்று அகத்திக் கீரை பொரியல், நெல்லிக்காய், தயிர்ப்பச்சடி, எல்லாக் காய்களும் போட்டு புளிக்கூட்டு (குழம்பு), பாயசம் கொஞ்சம் செய்வார்கள்.
Subscribe to:
Posts (Atom)